திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ஒரு காட்டு யானை வீதியை கடந்து சென்றமையால் சுமார் 10
நிமிடங்களுக்குப் போக்குவரத்து தடைப்பட்டது.
இந்தச் சம்பவம் இன்று (23) காலை 7.30 மணியளவில் தோப்பூர் சந்திப் பகுதியில் இடம்பெற்றது.
வனப்பகுதியில் இருந்து வீதிக்கு வந்த ஒற்றை யானை, மிகுந்த நிதானத்துடன் பிரதான
வீதியைக் கடந்து சென்றது.
போக்குவரத்து தடை
வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனங்களின்
சாரதிகள் யானையைப் பார்த்ததும் உடனடியாக வாகனங்களை நிறுத்தியமையால் எந்தவித
அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
பெரும் போக்குவரத்து நெரிசல்
இந்த பிரதான வீதி நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பிரயாணம் செய்யும்
மிகவும் பரபரப்பான ஒரு பாதையாகும்.

திடீரென யானை வீதியைக் கடந்து சென்றதால்,
வீதியின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
சுமார் 10
நிமிடங்களுக்குப் பின்னரே யானை பாதுகாப்பாக வீதியைக் கடந்து மீண்டும்
வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.
கோரிக்கை
இந்தப் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக
அதிகாலையிலும், மாலை வேளைகளிலும் யானைகள் நீர் மற்றும் உணவு தேடி
வனப்பகுதியில் இருந்து வீதியை அண்மிக்கின்றன என்றும் அப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக தோப்பூர், இங்கினியமிட்டி போன்ற காட்டுப்பகுதிகளை
அண்மித்த இடங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகமாகியுள்ளது.

வாகனச் சாரதிகள்
அதிவேகமாகச் செல்லாமல் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்த வேண்டும்,”
என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களுக்குக் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
யானைகளின் பாதுகாப்பையும், வீதிப் பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த
வனஜீவராசிகள் திணைக்களமும், வீதிப் பாதுகாப்புப் பிரிவினரும் இணைந்து மேலதிக
நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

