டித்வா புயல் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்துக்கு சுமார்
1872 மில்லியன் ரூபாய் அனர்த்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ் – கிளிநொச்சி
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம்
சந்திரசேகரன் தெரிவித்தார்.
நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அனுரகுமார திசாநாயக்க பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள கட்டியமைப்பதற்கு அனத்த நிவாரண பணிக்காக சுமார் 10 ஆயிரத்து 290 மில்லியன் ரூபாக்களை முதற்கட்டமாக முழு நாட்டுக்கும் ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஒதுக்கப்பட்ட நிதிகள் சகல மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பில் பாதிப்புக்குள்ளான தரவுகளின் அடிப்படையில் பிரதேச செயலகங்கள் ரீதியாக பங்கீட்டு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நிதி ஒதுக்கீடு
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“ வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் அதிக பாதிப்புக்கு உள்ளான மன்னார்
மாவட்டத்திற்கு விசேடமாக 954 மில்லியனும் , யாழ். மாவட்டத்திற்கு 365
மில்லியனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 206 மில்லியனும், முல்லைத்தீவு
மாவட்டத்திற்கு 189 மில்லியனும் மற்றும் வவுனியா மாவட்டத்திற்கு 158
மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தைப் பொறுத்தவரையில் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மன்னார்
மாவட்டம் விளங்குகின்ற நிலையில் 954 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களின் பாதிப்பு மற்றும் தேவைப்பாடுகளின் அடிப்படையில் நிதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது மாகாண சபைகளுக்கும் விசேடமாக அனர்த்த நிவாரண நிதியைப்
பெற்றுக் கொடுப்பதற்கான கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள
நிலையில் அதனூடாக பெறப்படுகின்ற நிதிகளும் பயனுள்ள வகையில் பங்கீடு
செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.
வடக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் உயிரிழப்புக்கள் குறைவாக காணப்பட்டாலும்
மக்களை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் பண்ணை வளர்ப்பு அதிகமான பாதிப்புகளை எதிர்நோக்கி உள்ளதாக
அறிய கிடைக்கின்ற நிலையில் அதன் முழுமையான புள்ளிவிபரங்கள் இறுதி
செய்யப்படவில்லை.
மன்னார் மாவட்டத்தில் மட்டும் சுமார் 15 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்திருக்கலாம் என எதிர்வு கூறப்படும் நிலையில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி
மாவட்டங்களின் தரவுகள் இறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறான ஒரு நிலையில் முழு நாடும் வரலாறு காணாத அனர்த்த நிலையை சந்தித்துள்ள
நிலையில் எதிர்க்கட்சிகள் தமது குறுகிய அரசியல் சுய இலாபத்தை
தேடிவருகின்றனர். அனர்த்த நிலைமையை காரணம் காட்டி ஆட்சியை கவிழ்த்து விடலாம் என ஒரு கூட்டமும்
ஆட்சியை எம்மிடம் தாருங்கள் என இன்னொரு கூட்டமும் மக்கள் நலன்களை
சிந்திக்காமல் அதிகார மோகத்தில் திரிகின்றனர்.
நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவரும் நிலையில் ஏற்பட்ட இயற்கை
அனர்த்தம் அரசாங்கத்துக்கு சவாலான விடயமாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களை
மீட்டெடுப்பதற்கு அரசாங்கம் எந்த சவாலையும் ஏற்ற தயாராக இருக்கிறது ” என அவர்
மேலும் தெரிவித்தார்.

