நாட்டில் சமீபத்திய பேரழிவால் ஏற்பட்ட வீட்டு சேதத்தை மதிப்பிடும் பணி இன்று (8) தொடங்கும் என்று வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு (Ministry of Housing, Construction, and Water Supply) தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்தால் நிறுவப்பட்ட குழுவால் குறித்த மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சேதமடைந்த வீடுகளை சுத்தம் செய்வதற்கு 25,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
வழங்கப்படவுள்ள கொடுப்பனவு
அதே நேரத்தில், வீட்டு உரிமையைப் பொருட்படுத்தாமல், மீள்குடியேற்றம் மற்றும் அத்தியாவசிய வீட்டு உபகரணங்கள் வாங்குவதற்கு ஒரு வீட்டிற்கு 50,000 ரூபாய் ஒரு முறை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடுகள் அல்லது வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்த குடும்பங்களுக்கு, மூன்று மாதங்கள் வரை நிதி உதவி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அதற்கமைய இரண்டு அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 25,000 ரூபாயும் இரண்டுக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும்.
மேலும், மீள்குடியேற்ற வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு அதிகபட்சம் ஆறு மாதங்கள் வரை 25,000 ரூபாய் மாத வாடகை கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

