எதிர்க்கட்சியினர் கடந்த நவம்பர் 12ஆம் திகதி முதலே புயல் எச்சரிக்கை குறித்து
அறிந்திருந்ததாகக் கூறி மௌனம் காத்திருந்தால், அவர்கள் மீது வழக்குத் தொடர
வேண்டும் என பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நவம்பர் 12ஆம் திகதி முதல் புயல் எச்சரிக்கை குறித்து அறிந்தும் அதனை
அரசாங்கத்திற்குத் தெரிவிக்கத் தவறியமைக்காக எதிர்க்கட்சியினர் மீது வழக்குத்
தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன் அறிவிப்பு வழங்கவில்லை
அவர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
புயல் வரவுள்ளதாக
வளிமண்டலவியல் திணைக்களமோ அல்லது நீர்ப்பாசனத் திணைக்களமோ அரசாங்கத்திற்கு
எவ்வித முன் அறிவிப்பையும் வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் தாங்கள் கூறியது போல் எச்சரிக்கை குறித்து அறிந்திருந்தால்,
அரசாங்கத்தைப் போலவே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான
எதிர்க்கட்சிகளுக்கும் இதேபோன்ற பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) போன்ற
எதிர்க்கட்சிகள் கடந்த நவம்பர் 12 முதல் நவம்பர் 26 வரை 14 நாட்கள்
நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டன.
அவர்களில் எவரும் அதனை நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை.

மாறாக, அனர்த்தம் ஏற்படும் வரை அதை இரகசியமாக வைத்திருந்தனர்.
இத்தகைய அனர்த்தத்தைத் தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பது போலவே,
எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு உள்ளது.
அவர்களும் மக்களின் வாக்கினால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளே என்று மகிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை குறித்து அறிந்தும் அதை வெளியிடாமல் மறைத்தமை மூலம்
எதிர்க்கட்சியினரே அரசாங்கத்தை விட மோசமான குற்றத்தைச் செய்துள்ளதால்,
அரசாங்கத்தின் மீது அல்லாமல் எதிர்க்கட்சியினர் மீது சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

