யாழ்ப்பாணத்தில் அனர்த்த நிவாரண நிதியில் தாம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பொதுமகன் ஒருவரால் செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.
குறித்த முறைப்பாடு நேற்று பதிவு செய்யப்பட்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் அனர்த்த நிவாரண கொடுப்பனவில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கல்லுண்டாய் கிராமத்தில் வசிக்கும் பொதுமகன் ஒருவர் குறித்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
முறைப்பாடு பதிவு
கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்லுண்டாய் கிராமத்தில் தற்போது தாம் வசிப்பதில்லை எனத் தெரிவித்தே அரச அதிகாரிகள், நிவாரண திட்டத்தில் தமது குடும்பத்தைப் புறக்கணித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தனது நிரந்தர வதிவிடம் அங்குள்ள நிலையில், பாதுகாப்பின் நிமித்தம் குருநகர் பகுதியில் தாம் வசிப்பதாகக் குறித்த பொதுமகன் தெரிவித்துள்ளார்.

