அனர்த்தத்தின் போது யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட வீட்டிற்கு 25 ஆயிரம்
ரூபாய் நிதி உதவி வழங்க மறுத்த கிராம சேவையாளருக்கு எதிராக பாதிக்கப்பட்ட நபர்
ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் .பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு
செய்துள்ளார்.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லுண்டாய் பகுதியில் உள்ள புதிய
வீட்டு திட்டத்தில் வசிக்கும் 16 வயதான மாணவனே முறைப்பாடு செய்துள்ளார்.
பதிவுகளை மேற்கொள்ள சென்ற வேளை
குறித்த முறைப்பாட்டில், ”தந்தை இல்லாத நிலையில் தாயுடன் கல்லுண்டாய் புதிய
வீட்டு திட்ட பகுதி வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு
முன்னர் அம்மா வேலை நிமர்த்தமாக கொழும்பில் தங்கியுள்ளார்.
நான் தனியே அந்த வீட்டில் இரவு நேரங்களில் தங்க முடியாததால் , குருநகர்
பகுதியில் உள்ள பெரியம்மா வீட்டில் தங்குவேன்.

இந்த நிலையில் மழை ஆரம்பித்தால் எமது வீடு வெள்ளத்தில் மூழ்குவது வழமையானது.
அதனால் மழை ஆரம்பித்ததால் , நான் தொடர்ச்சியாக பெரியம்மா வீட்டில்
தங்கியிருந்தேன்.
எமது வீட்டினுள் வெள்ளம் சென்று இருந்தது.
இந்த நிலையில் , பேரிடரால் எமது வீடு வெள்ளத்தில் மூழ்கியதால் , அரசாங்கத்தால்
வழங்கப்படும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவிக்காக எமது பகுதி கிராம சேவையாளரிடம்
பதிவுகளை மேற்கொள்ள சென்ற வேளை , அவர் எமது பதிவுகளை ஏற்கவில்லை.
நிதியுதவியை பெற்று தர
வெள்ளம் ஏற்படும் போது, வீட்டில் எவரும் வசிக்கவில்லை என கூறி எமது பதிவை
பதிய மறுத்துள்ளார்.
ஆனால் எமது அயலவர்கள் சிலரும் வெள்ளம் வருவதற்கு சில
நாட்களுக்கு முன்னரே அங்கிருந்து வெளியேறி உறவினர்கள் வீட்டில்
தங்கியிருந்தனர்.

அவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. எமது குடும்பத்தை
மாத்திரமே கிராம சேவையாளர் திட்டமிட்டு புறக்கணித்துள்ளார்.
இது தொடர்பில் அம்மா மேலதிகாரிகளுடன் கதைத்த போதிலும், வீட்டில் வசிக்கவில்லை
என கூறி நிதியுதவி தரவில்லை.
எமக்கு அந்த நிதியுதவியை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே மனித
உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளேன்” என மாணவன் மேலும் தெரிவித்தார்.

