விமானங்கள் ரத்தால் பாதித்த பயணியருக்கு மேலதிக இலவச பயண வவுச்சர்களை இண்டிகோ நிறுவனம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில், 10,000 ரூபாய் மதிப்பிலான இலவச பயண வவுச்சர்களை வழங்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ விமானங்களின் தொடர் ரத்தால் பாதிக்கப்பட்ட பயணியருக்கு கட்டணத்தை திரும்ப வழங்கிய அந்நிறுவனம், அவர்களுக்கு கூடுதல் சலுகையாக குறித்த இலவச பயண வவுச்சர்களையும் வழங்க திட்டமிட்டுள்ளது.
கடுமையான கட்டுப்பாடு
விமான இயக்கத்தின் பாதுகாப்பு கருதி, விமானிகள் மற்றும் ஊழியர்களின் பணிநேரத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.
இதனால் இண்டிகோ நிறுவனம் ஊழியர் பற்றாக்குறையை சந்தித்தது, இதன் காரணமாக டிசம்பர் முதல் வாரத்தில் நாடு முழுதும் இண்டிகோ விமானங்கள் முடங்கின.

இதனால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் உள்ளிட்ட விமான பயணியர் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பயணியரின் நலன் கருதி இண்டிகோ நிறுவனத்துக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் பாதுகாப்புக்காக கொண்டு வரப்பட்ட விதியில் தற்காலிக தளர்வு வழங்கியது.
பயணியருக்கு முழு கட்டணத்தையும் திரும்ப செலுத்த உத்தரவிட்ட நிலையில், அதற்கான நடவடிக்கையை நிறுவனம் முன்னெடுத்துள்ளது.
கூப்பன்கள்
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட பயணியருக்கு 10,000 ரூபாய்க்கான இலவச பயண கூப்பன் வழங்கி கூடுதல் சலுகையும் இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “டிசம்பர் மூன்றாம் திகதி முதல் ஐந்தாம் திகதி வரை இண்டிகோவில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணியர், விமான நிலையங்களில் பல மணி நேரம் சிக்கித் தவித்ததையும் மற்றும் அவர்களில் பலர் பெரிதும் பாதிக்கப்பட்டதையும் வருத்தத்துடன் ஒப்புக்கொள்கின்றோம்.
இவ்வாறு கடுமையாக பாதிக்கப்பட்ட பயணியருக்கு அரசு வழிகாட்டுதல்படி விமான தாமதத்தின் அடிப்படையில், 5,000 முதல் 10,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும்.
இது தவிர, 10,000 ரூபாய் மதிப்பிலான இலவச பயண கூப்பன்கள் வழங்கப்படும், இந்த கூப்பன்களை, அடுத்த 12 மாதங்கள் வரை இண்டிகோவில் பயணம் செய்ய பயன்படுத்தலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

