யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடர் நிவாரண உதவிக்குத் தெரிவானோரின் பெயர்
விவரங்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், முறைப்பாடுகள் இருப்பின் அது தொடர்பில் முறையிடுமாறு யாழ்ப்பாணம்
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டித்வா புயலால் 14 ஆயிரத்து 624 வீடுகள்
பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, அவற்றைத் தூய்மைப்படுத்துவதற்காக 36 கோடி
ரூபாவுக்கும் மேற்பட்ட நிதி பெறப்பட்டுள்ளது.
மோசடியான தரவுகள்
எனினும், யாழ்ப்பாணத்தில்
இவ்வளவுதூரம் பெரும் பாதிப்புக்கள் இல்லை என்றும், மோசடியான முறையில் தரவுகள்
வழங்கப்பட்டு இந்த நிதி பெறப்பட்டுள்ளது எனவும் பொதுவான குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட
பயனர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியல் பிரதேச செயலகங்களில் தற்போது
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் யாருடைய பெயரேனும் தேவையிருந்தும் இணைக்கப்படாதிருப்பின்
அல்லது தவறான வழியில் நிவாரணம் கொடுக்க இணைக்கப்பட்டிருப்பின் தகுந்த
ஆதாரங்களுடன் அறியத் தருமாறு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு
அறிவித்துள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தில்
முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

