வராத ஒன்றை எதிர்ப்பதாக தமிழ் தேசிய பேரவையின் தமிழ்நாட்டுக்கான பயணம்
அமையாமல், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வழங்குவதை உறுதி
செய்யுமாறு, தமிழக அரசியல் பிரமுகர்களை வலியுறுத்தும்படியாக அவர்களது பயணம்
அமைய வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன்
தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியப் பேரவையின் தமிழக பயணம் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
இதனை தெரிவித்துள்ளார்.
ஏக்கியராச்சிய அரசியல்யாப்பு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏக்கியராச்சிய அரசியல்யாப்பில் குறைகள் உள்ளதாக தெரிவித்து தமிழீழ விடுதலை
இயக்கமானது ஏற்கனவே அதை நிராகரித்திருந்தது.
அது ஒரு மாதிரி வரைபாக இருந்ததே
தவிர இறுதி வரைபாக கொண்டுவரப்படவில்லை.
இலங்கை தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வேண்டும் என்ற
அடிப்படையில், இலங்கை அரசாங்கமானது முன்வைக்கப்போகின்ற தீர்வுத்
திட்டத்திற்கான அழைப்பில், நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொதுத் தீர்வினான
சமஷ்டி தீர்வினை வலியுறுத்த வேண்டும் என்று ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தில்
நாங்கள் இணக்கப்பாடு கண்டுள்ளோம்.
தமிழகத்திற்கான அரசியல்
தமிழகத்திற்கான அரசியல் பயணம் என்பது, தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல்
தீர்வுக்காக தமிழகத்தில் இருக்கின்ற முக்கியஸ்தர்களை சந்திப்பதாக அமைவது
வரவேற்கத்தக்கது.

ஆனால் வராத ஒரு தீர்வினை அல்லது அரசியல் யாப்பினை
நிராகரிக்கின்றோம் என்று கூறி கலந்துரையாடல் செய்வது என்பது எந்தளவுக்கு
பயனளிக்கும் என்று தெரியவில்லை.
புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வரவேண்டும் என்ற
விடயத்தை கோருவதாக அந்த பயணம் அமைந்தால் அது வரவேற்கத்தக்கது.
தமிழ்நாடு மாத்திரம் அல்ல, சர்வதேச பயணங்களில் ஈடுபடுகின்ற போது எமக்கான
சமஸ்டி தீர்வினை அரசாங்கம் தரவேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற பயணமாக அந்தப்
பயணம் அமைந்தால் அது ஆரோக்கியமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

