வடக்கில் வன வள மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட காணிகளை விடுவிப்பது தொடர்பாக தொடர்புபட்ட அமைச்சுடன் பேசவேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் நேற்றைய தினம் (17.12.2025) 12.30 க்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அறிவுறுத்தல்கள்
இந்தக் கூட்டத்தில் அரசாங்க அதிபரால் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியான காணி பயன்பாட்டு விடயங்கள் ஆராயப்பட்டு, பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

1.மாவட்ட காணி பயன்பாட்டு குழுவினால் வழங்கப்பட்ட அரச காணிகள் வழங்கப்பட்ட திகதியில் இருந்து 06 மாத காலம் தொடக்கம் ஒரு வருடம் வரையில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தால், அக் காணிகளுக்கு அனுமதியை இரத்து செய்யுமாறும் அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.
2.காணிகள் தொடர்பாக பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச மட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவில் அனுமதியைப் பெற்ற பின்னர் பிரதேச மட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைப் பெற்று பின்னர் மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுவில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
3.வன வளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆளுகைக்கு உட்பட்டதும் வெவ்வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுடன் கலந்துரையாடி முடிவெடுப்பதாகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
4.பிரதேச செயலாளர் பிரிவுகளில் அரச காணிகளில் குடியிருக்கும் மக்களுக்கு காணிகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
5.அரச காணிகளை பொதுமக்களுக்கு அல்லது பொதுத்தேவைகளுக்காக அவசியத் தேவைக்கான காணிகளை மட்டும் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கூறியதுடன், அவசியமற்ற விடயங்களுக்கு வழங்குவதை தவிர்க்குமாறும் உரிய முறையில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.






