முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த மழைவெள்ளத்தினால் புதுக்குடியிருப்பு
பிரதேசத்தில் உள்ள கள்ளியடி வயல் வெளியில் 1000 ஏக்கர் நெற்பயிர்செய்கை
அழிவினை எதிர்கொண்டுள்ளதாகவும் அழிவு கணக்கெடுக்கும் நடவடிக்கை இடம்பெற்று
வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த நவம்பர் மாதம் 27-28-29ஆம் திகதிகளில் ஏற்பட்ட புயல் தாக்கத்தினை
தொடர்ந்து ஏற்பட்ட மழைவெள்ளப்பெருக்கு காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின்
முத்தையன் கட்டுக்குளம் நேற்று வரை (18) வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.
குளத்தின் நீரானது பேராறு ஊடாக கள்ளியடி ஊடாக நந்திக்கடலை சென்றடைகின்றது.
இதனால் புதுக்குடியிருப்பு கமநலசேவைக்கு உட்பட்ட கள்ளியடி வயல் வெளியில்
சுமார் 1500 ஏக்கர் வரை நெற்செய்கை செய்துள்ள விவசாயிகளின் நெற்செய்கை
பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கோரிக்கை
கடந்த 21 நாட்களாக இந்த விவசாயிகளின் நெற்பயிர்கள் நீரில் மிதக்கின்றன.
இந்த நிலையில் இன்று 18-12-25 புதுக்குடியிருப்பு கமநலசேவை திணைக்கள
அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.சுஜீபரூபன் வயல் நிலங்களுக்கு சென்று
நெற்பயிர்அழிவு தொடர்பானவிபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அண்ணளவாக 1000 ஏக்கர் வயல் நிலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள்
தெரிவித்துள்ளார்கள்.
நெற்பயில் செய்கை பண்ணி மூன்று மாதங்கள் கடந்துள்ளன. குடலைப்பருவத்தில்
இப்போதும் வெள்ளத்தில் வயல் நிலங்கள் மூழ்கி காணப்படுகின்றது.
இந்த பகுதியில் மல்லிகைத்தீவு வெளி,கள்ளியடி வெளி,ஆனைக்கிடங்கு வெளி போன்ற
வெளிகளில் வயல்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் இந்த அழிவினை
எதிர்கொண்டுள்ளார்கள்.
விவசாய செய்கைக்கான முழு அழிவினையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்
விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.









