மக்கள் உயிருக்குப் போராடும் இடர் வேளையில் எரிபொருள் மற்றும் நிதியைக் காரணம்
காட்டி பணிகளைத் தாமதப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்திலுள்ள கைதடி உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து இதனை கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், பேரிடர் காலங்களில் மக்களின் துயர்துடைக்க இரவு பகலாக உழைத்த பல தவிசாளர்களை
நான் பாராட்டுகின்ற அதேவேளை, சில கசப்பான உண்மைகளையும் சுட்டிக்காட்ட
வேண்டியுள்ளது.
நிர்வாகச் சிக்கல்
பேரிடர் வேளையில் சில சபைகளின் செயற்பாடுகள் தொடர்பில் மாவட்ட
மற்றும் பிரதேச செயலாளர்கள் என்னிடம் கவலையோடு முறையிட்டனர்.

மக்கள் உயிருக்குப் போராடும்போது, ‘எரிபொருள் தந்தால்தான் இயந்திரங்களை
இயக்குவோம்’, ‘பணம் ஒதுக்கினால்தான் வேலை செய்வோம்’ என நிபந்தனை
விதித்துக்கொண்டு நிர்வாகச் சிக்கல்களைக் காரணம் காட்டியதை மன்னிக்க முடியாது.
மாகாண நிர்வாகம் நிதியை வழங்கத் தயாராக இருக்கும்போதும், பிரதேச செயலகங்களில்
நிதியைக் கோரி காலத்தை வீணடித்தமை தவறான முன்னுதாரணமாகும்.
இன்றைய ஊடகங்களில் வெளியான செய்தி வேதனையளிக்கிறது. யாழ். மாநகர சபைக்குட்பட்ட
பகுதியில் வீடொன்றின் மீது மரம் வீழ்ந்த நிலையில், அதனை அகற்ற ஆளணி இல்லை என
கைவிரித்ததாகவும், இறுதியில் சபை உறுப்பினர்களே அதனை அகற்றியதாகவும்
அறியமுடிகிறது.
இது மிகவும் வெட்கக்கேடான விடயமாகும். ஆபத்து வேளையில் இவ்வாறு
பொறுப்பற்ற ரீதியில் அதிகாரிகள் நடந்துகொள்வதை ஏற்க முடியாது” என தெரிவித்துள்ளார்.



