அரச அதிகாரிகளுக்கு எதிராகவோ பிரதேச செயலகத்தினையோ முற்றுகையிடப் போவதாக எந்த தீர்மானமும் எடுக்கவில்லையென மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமீன்மடு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் நடத்திய ஊடக சந்திப்பில், ”எமது கிராமத்தில் உள்ள பொது
அமைப்புகள் என்று கூறி ஊடக சந்திப்பினை செய்தவர்கள் எந்த பொது அமைப்பின்
பிரதிநிதிகளும் அல்ல.
பாலமீன்மடு கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம்,
ஆலய நிருவாகிகள், பொதுச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், இளைஞர் கழகங்கள்
போன்ற பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த ஊடக சந்திப்பில்
கலந்து கொண்டுள்ளோம்.
முற்றுகை குறித்து வெளியான தகவல்
இதிலே நாங்கள் தெளிவுபடுத்த இருக்கும் விடயமானது, கடந்த சில நாட்களாக எமது
பாலமீன்மடு கிராமத்தின் பெயரைப் பயன்படுத்தி சில தேவையற்ற ஊடக சந்திப்புகள்
இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதனைத் தெளிவுபடுத்தும் நோக்கத்திலேயே
பாலமீன்மடு கிராமத்தின் பொது அமைப்புகள் சேர்ந்து இந்த ஊடக சந்திப்பினை
நடாத்துகின்றோம்.
கடந்த 16ஆம் திகதி சில நபர்களினால் பாலமீன்மடு கிராமத்தின் பொதுச் சங்கங்கள்
ஒன்றிணைந்து பிரதேச செயலகத்தை முற்றுகையிவோம் என்று கூறியிருந்தார்கள்.
அந்த
விடயத்திற்கும், அதாவது பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு, அரச ஊழியர்களுடைய
செயற்பாடுகளை முடக்குவோம் என்கின்ற அந்த ஊடக சந்திப்புக்கும், பாலமீன்மடு
கிராம பொதுச் சங்கங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை, நாங்கள் அவ்வாறானதொரு
முடிவும் எடுக்கவில்லை. இதனை நாங்கள் முதற்கண் மறுக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

