Courtesy: Thavaseelan shanmugam
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளமை குறித்த வைத்தியசாலையின் தவறு எனவும் சிறுமி உயிரிழப்பிற்கு சரியான நீதி வேண்டும் எனவும் முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 20ஆம் திகதியன்று உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட 12 வயதுடைய சிறுமி ஒருவர் 21ஆம் திகதியன்று உயிரிழந்தார்.
குறித்த சிறுமியின் உயிரிழப்புக்கு நீதியான விசாரணை தீர்வு வழங்கப்பட வேண்டும் என சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதியான தீர்வு
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள், ‘உயிரிழந்த சிறுமிக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்க வேண்டும்.

வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் பிள்ளைகளுக்கு இது போன்று எதிர்காலத்தில் நடக்கக்கூடாது.
போரில் அடிபட்டு உயிரிழந்துவிட்ட நிலையில் இப்போது ஒவ்வொரு உயிராக வளர்த்துக் கொண்டிருக்கின்றோம். கவனயீனத்தினால் பிள்ளைகள் உயிரிழக்குமாக இருந்தால் இதனை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்.
இதற்கான தீர்வினை வைத்தியசாலை அதிகாரிகள் தரவேண்டும் தவறும் பட்சத்தில் சிலாவத்தை மக்கள் யார் என்பதை இந்த அரசாங்கத்திற்கு காட்டிக்கொள்வோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சிறுமியின் இறுதி நிகழ்வுகள் இன்று (24.12.2025) சிலாவத்தை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

