தமிழ் தாயகத்தில் காணப்படும் எந்த புத்தச் சின்னங்களும் சிங்கள புத்த
மதத்திலிருந்து தோன்றியவை அல்ல. அவை அனைத்தும் பண்டைய தமிழ் புத்த மரபின்
மீதமுள்ள சாட்சிகள் என தமிழர் தாயக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்தார்.
வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் நேற்று (25.12.2025) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டோர் இந்த கிறிஸ்மஸ் தினத்தில்
சர்வதேசத்திற்கு ஒரு செய்தியை கூறுவதாக தெரிவித்து அவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்
ஈடுபட்டிருந்தனர்.
பரந்த நாகரிகம்
இதன் போது வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல்
ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் கருத்து
தெரிவிக்கையில்,
இந்தக் கிறிஸ்துமஸ் தினத்தில், அனைத்து தமிழர்களிடமும் ஒரு பணிவான, தெளிவான வேண்டுகோளை வைக்கிறோம். எமது மண்ணிலுள்ள எமது உண்மையான வரலாற்றை
கற்றுக்கொள்வோம். எமது இளம் தலைமுறைக்கு அதை கற்பிப்போம்.

சிங்கள இன அடையாளம் உருவாக்கப்படுவதற்கு முன்பே, இந்தத் தீவில் தமிழர்கள்
வாழ்ந்தனர். இந்தத் தீவு, தமிழ் நாட்டுடன் இணைந்த தமிழகம் என்ற பரந்த நாகரிகப்
பரப்பின் ஒரு பகுதியாக இருந்தது.
சங்க காலம் முதல், சைவத் தமிழர்களும் தமிழ் புத்தர்களும் இந்தத் தீவின் நாகரீக
வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தனர். தமிழ் புத்தமதம் ஒரு இன அடையாளம் அல்ல.
அது ஒரு தமிழ் பண்பாட்டு மற்றும் ஆன்மீக மரபு. பின்னர், மத நிறுவனங்களில்
ஏற்பட்ட ஒழுக்கச் சீர்கேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகளால், பல தமிழ்
புத்தர்கள் மீண்டும் சைவத்திற்குத் திரும்பினர்.
ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், வட இந்திய வணிகர்கள், இயக்கர் மற்றும் நாகர்
குழுக்கள், மேலும் சில தென்னிந்திய வணிகக் குழுக்கள் இணைந்து, பின்னர் சிங்கள
புத்த அடையாளமும் சிங்கள மொழியும் உருவானது என்பது வரலாற்று ஆய்வுகளில் பதிவு
செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.





