பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செங்கோலைத் தூக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றம் இன்று கூடி விவாதம் இடம்பெற்றிருந்த வேளை, அவசர விவாதம் ஒன்றை நடத்துவதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று சபாநாயகரிடம் முறைப்படி பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தது.
எனினும், இந்த அவசர விவாதக் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், இதற்காக நாடாளுமன்றத்தில் நேரம் ஒதுக்க முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்தார்.
சபாநாயகரின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதமும், கூச்சல் குழப்பமும் ஏற்பட்டது. அத்துடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செங்கோலை கைப்பற்றவும் முயன்றனர் .இதனால் பெரும் தள்ளுமுள்ளு அங்கு நிலவியது.
சபை நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாத அளவுக்குப் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, சபையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சபாநாயகர் நாடாளுமன்றத்தை 10 நிமிடங்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இச்சம்பவம் நாடாளுமன்ற வட்டாரத்தில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

