இந்திய (India) வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் (S. Jaishankar) முன்னெடுக்கப்படும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு (Sri Lanka) பயணம் செய்துள்ள ஜெய்சங்கர், பல்வேறு தரப்பினரை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுப்பதோடு இந்திய நிதி உதவியின் கீழ் முன்னெடுக்கும் திட்டங்களை மெய்நிகர் ஊடாக திறந்து வைத்துள்ளார்.
இந்த நிலையிலேயே, இன்று (20) நாடாளுமன்றில் உரையாற்றிய விமல் வீரவன்ச குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஜெய்சங்கரின் பயணம்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “இலங்கைக்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று பயணம் செய்துள்ளார்.

அதானி நிறுவனத்தின் காற்றாலை திட்டத்தை இலங்கையில் முன்னெடுப்பது உள்ளிட்ட சுமார் 12 வேலைத்திட்டங்கள் தொடர்பான இணக்கப்பாடை எட்டுவதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளார்.
வெளிப்படைத்தன்மை
இந்த நிலையில், ஜெய்சங்கர் ஏன் ஒரு சில மணிநேரம் மாத்திரம் இலங்கையில் இருக்கும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டார் என்பதை அறிந்து கொள்ளும் உரிமை இந்த சபைக்கு உள்ளது.
இதன்படி, அவர் இணக்கப்பாடை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள திட்டங்கள் தொடர்பில் நாடாளுமன்றுக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Source: https://ibctamil.com/article/india-jaishankar-visit-sl-details-must-be-revealed-1718901775

