வவுனியா (Vavuniya) – ஓமந்தை பகுதியில் காணி பிரச்சினை காரணமாக இடம்பெற்ற
வாள்வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவமானது, நேற்று (10.10.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
ஓமந்தை – கதிரவேலு, பூவரசன்குளம் பகுதியல் வசிக்கும் இரு
குடும்பங்களுக்கிடையில் காணி தொடர்பாக சிறிய பிணக்கு ஒன்று இருந்து
வந்துள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்நிலையில், குறித்த காணியில் மாமன் மற்றும் மருகன் ஆகிய இருவரும்
வேலை செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த நபர்கள் அந்த இருவர் மீதும்
மிளகாய் தூளை அள்ளி வீசிவிட்டு அவர்களை விரட்டி வாள் வெட்டு தாக்குதலை
மேற்கொண்டதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளங்கோ (வயது 38) என்பவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின தந்தையான
ரூ.திலீபன் என்பவர், படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மற்றும் ஊர் மக்களால் வவுனியா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், படுகாயமடைந்தவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இறந்தவரின்
உடல் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓமந்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



Source: https://tamilwin.com/article/one-died-in-sword-on-land-issue-vavuniya-omanthai-1728586418

