ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (23) அதிகாலை பாரிய மரமொன்று வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் ஹட்டன் – கொழும்பு பிரதான சாலையின் மல்லியப்பு டீ விழா விருந்தினர் விடுதி அருகே இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
அதிகாலை வீசிய பலத்த காற்றின் காரணமாக பாரிய மரமொன்று வீதியின் குறுக்கே சரிந்து விழுந்ததால், ஹட்டனிலிருந்து கொழும்பு மற்றும் கண்டி நோக்கிச் சென்ற வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நோர்வூட் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஹட்டன் பொலிஸார் இணைந்து மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மரம் முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.

