மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தையில் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அவசர சந்திப்பொன்றை நடத்த இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC) கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய எண்ணெய் சந்தையின் தற்போதைய நிலைமை இலங்கைக்கு கவலையளிப்பதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை மேலும் மோசமடையக்கூடிய நிலையில், அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக சந்திப்பைக் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நிலவிய விலைகளுடன் ஒப்பிடுகையில், டீசல் விலை 45 சதவீதமும், பெட்ரோல் விலை 30 சதவீதமும் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மசகு எண்ணெயின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், எரிபொருள் இறக்குமதியை முழுமையாகச் சார்ந்திருக்கும் இலங்கைக்கு இது கூடுதல் சவால்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட வேண்டியுள்ளதாகவும், அதேவேளை நாட்டில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதும் அவசியமாகியுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலைகளைக் கருத்திற்கொள்ளும்போது, தற்போதைய உள்நாட்டு விலையில் எரிபொருளை விற்பனை செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக நாட்டில் செயற்படும் ஏனைய சில்லறை எரிபொருள் விநியோக நிறுவனங்களும் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரான் மற்றும் உக்ரைன் தொடர்பான மோதல்களால் ஏற்பட்ட விநியோகத் தடைகள் காரணமாக, மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் மசகு எண்ணெய் விலைகள் இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்த வாரம் அதிகரித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சில சந்தைகளில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 110 அமெரிக்க டொலரை நெருங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ‘எல் நினோ’ வானிலை தாக்கத்தால் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக நீர்மின் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், மின்சார உற்பத்திக்காக அதிகளவு எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக டி.ஜே. ராஜகருண தெரிவித்துள்ளார்.

