நுவரெலியா (Nuwara Eliya) கூட்டுறவுத் தங்குமிடம் விடுதியில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம்
இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.
பனாபிட்டிய, கரந்தெனிய பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் தங்குமிடத்துக்கு வந்திருந்த மேற்படி இளைஞர்,
அந்த இடத்தை விட்டு இன்று காலை வெளியேறுவதாக விடுதி நிர்வாகத்துக்குத்
தெரிவித்திருந்தார்.
மேலதிக விசாரணை
எனினும், இன்று காலை வரை அவர் வெளியே வராத காரணத்தால் சந்தேகம் ஏற்பட்டு
அறையின் யன்னல் பகுதியில் இருந்து ஆய்வு செய்தபோது, சம்பந்தப்பட்டவர் தரையில்
வீழ்ந்து கிடப்பதைப் பார்த்த ஊழியர் ஒருவர் இது குறித்து நுவரெலியா
பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார், மேற்படி நபர் தங்கியிருந்த அறையின்
கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 1990 நோயாளர் காவு வண்டி சேவைக்குப் பொலிஸார் அழைப்பு
விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த நோயாளர் காவு வண்டி சேவையினர், கீழே வீழ்ந்து
கிடந்த நபரைப் பரிசோதனை செய்து அவர் உயிரிழந்தமையை உறுதிப்படுத்தியுள்ளனர்.
தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக நுவரெலியா
மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
Source: https://tamilwin.com/article/body-recovered-from-a-nuwara-eliya-hostel-1721648938

