அநுராதபுர தலைமையக பொலிஸ் வலயத்திற்குட்பட்ட சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் நேற்று (01) காலை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரம்பாவ, பண்டுகாம்பயபுர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ரத்நாயக்க பண்டார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், தனது மகளை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்று காலை பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, சாலியபுர – மாண்கடவல சந்திப் பகுதியில் வைத்து அவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,
அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை அநுராதபுர தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுர தலைமையக பொலிஸின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

