பாகிஸ்தான் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஆப்கானைச் சேர்ந்த ஒன்பது சிறுவர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்ட நிலையில் உரிய நேரத்தில் பதிலடி கொடுப்போம் என ஆப்கானிஸ்தான் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானுக்கும்,ஆப்கானிஸ்தானுக்கும் இடையே எல்லையில் இருந்து இயங்கி வரும் டிடிபி எனப்படும் தெஹ்ரீக் இ தலிபான் என்ற பயங்கரவாத குழுவால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இக்குழு ஆப்கனில் இருந்து கொண்டு பாகிஸ்தானில் சமீபகாலமாக பயங்கரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.
பாகிஸ்தான் விமானப்படை மூலம் தாக்குதல்
இந்நிலையில் பக்டிகா, கோஸ்ட், குனார் மாகாணங்களில் பாகிஸ்தான் விமானப்படை மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

இறையாண்மை மீதான நேரடி தாக்குதல்
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில்,: பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் என்பது ஆப்கானிஸ்தான் இறையாண்மை மீதான நேரடி தாக்குதல். சர்வதேச விதிகளை பாகிஸ்தான் மீறியுள்ளது தெளிவாக காட்டுகிறது. இதனால், பாகிஸ்தான் எதையும் சாதிக்கவில்லை. இதற்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. இதற்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும்.


