எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்தமைக்கான தொழில்நுட்பக் காரணத்தினை அமெரிக்கத் தூதுவரிடத்தில் தெளிவுபடுத்தியதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுக்கும், அமெரிக்க தூதுவர் ஜுலி சுங் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் ஆகியோருக்கும் இடையில் இருவேறு சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன.
சந்திப்பு
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தில் நேற்று (13) நடைபெற்றுள்ளது.
இந்த சந்திப்பின்போது, சமகால நிலைமைகள் சம்பந்தமாக உரையாடப்பட்டதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, அரசியல் ரீதியாக தமிழ் மக்களின் நிலைப்பாடுகள், மத்திய அரசாங்கத்தின் செயற்பாடுகள் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து நேற்று மாலை, அமெரிக்கத்தூதரகத்தில் அமெரிக்கத்தூதுவர் ஜுலி சுங்குடன் சுமந்திரன் சந்திப்பை நடத்தியுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
இச்சந்திப்பு தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடுவதற்கு தீர்மானித்தமைக்கான தொழில்நுட்பக் காரணத்தினையும் அமெரிக்கத் தூதுவரிடத்தில் தெளிவுபடுத்தியதோடு அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் கருத்துப்பகிர்வு நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்க வெளியேறியுள்ள நிலையில் தமிழ் தரப்பினர் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை தொடர்பில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டதாக கூறியுள்ளார்.
தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்கான பயணத்தில் அமெரிக்காவின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் தொடர்ச்சியாக நீடிக்கும் என்றும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டதாகவும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.