முள்ளிவாய்க்கால் (Mullivaikal) பேரவல நினைவேந்தல் எதிர்வரும் மே மாதம்18ஆம் திகதி 15ஆவது
ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள்
மயப்படுத்த வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புக்களின் (Civil Society) பிரதிநிதிகள்
வலியுறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாண (Jaffna) புனித தெரேசா தேவாலய முன்றலில் நேற்று (21.04.2024) சிவில் சமூக அமைப்புக்களின் கலந்துரையாடலைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.
நீடித்த நினைவேந்தல்
மேலும் தெரிவிக்கையில், “முள்ளிவாய்க்கால் பேரவலம் 15ஆவது ஆண்டாக நினைவு கூரப்படவிருக்கின்ற நிலையில் நினைவேந்தலை நாங்கள் பரவலாக்கம் செய்ய
வேண்டும். இந்த நினைவேந்தல் மூலம் மீள நிகழாமை உறுதி செய்யப்பட வேண்டும்.

காஸாவில் தற்போது இன்னுமொரு மனிதப் பேரவலம் அரங்கேற்றப்பட்டுக்
கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட அவலம் மீண்டும் நடைபெறாமலிருப்பதை மனதிலே கொண்டு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாங்கள் முக்கியத்துவப்படுத்த வேண்டும்.
நினைவேந்தல் நிகழ்வை ஒரு இடத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தி வைக்காமல் பரந்த
அளவில் எல்லோரும் இயல்பாக அனுஷ்டிக்குமாறு அழைப்பு
விடுக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு நீடித்த நினைவேந்தலாக, இன அழிப்பின்
நினைவேந்தலாக எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதைக் கிராம மட்டப் பொது அமைப்புக்கள்
தீர்மானித்து முன்னெடுக்க வேண்டும்” எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப்
பிரதிநிதிகள் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல் – கஜி, தீபன்
Source: https://tamilwin.com/article/civil-society-urged-mullivaikal-memorial-1713764649

