“மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அதில் இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.
எனினும், கட்சியே இறுதி முடிவை எடுக்கும்”
என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்வில்
கலந்து கொண்ட ஜீவன் தொண்டமான் எம்.பியிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப்
பதிலளிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியிடம் ஒற்றுமை இல்லை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் ஆளுங்கட்சி மற்றும்
எதிர்க்கட்சி என இரு தரப்புகளுடனும் பேச்சு நடத்தினோம். எனினும்,
எதிர்க்கட்சியிடம் ஒற்றுமை இல்லை.

ஒற்றுமை இல்லாத அமைப்பை நம்பி இருந்தால்
வேலை செய்வதற்குரிய வாய்ப்பு இல்லாமல் போகும்.
உள்ளூராட்சி சபை என்பது நிர்வாக சம்பந்தப்பட்ட விடயம். அந்த நிர்வாகம் முறையாக
நடந்தால்தான் மக்களுக்குரிய சேவை முறையாகச் சென்றடையும்.
தனித்துப் போட்டி
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கட்சியே இறுதி முடிவை எடுக்கும். எனினும், நாம்
தனித்துப் போட்டியிட்டால் அது நமக்குப் பயனாக இருக்கும் என்பது எனது தனிப்பட்ட
கருத்தாகும்.

ஆளும் கட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எதிர்க்கட்சி மீதும்
நம்பிக்கை இல்லை. எனவே, நாம் எமது வழியில் பயணிப்பது சிறந்தது. எனினும்,
கட்சியே இறுதி முடிவை எடுக்கும்.” என்றார்.

