அண்மையில் ஹம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்தை வந்தடைந்த கப்பலிலுள்ள வாகனங்களை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அண்மையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் 197 வாகனங்கள் நாட்டிற்கு வந்தன.
குறித்த வாகனங்களின் உற்பத்தி ஆண்டு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் கீர்த்தி குணரத்ன (Keerthi Gunaratne) குறிப்பிட்டுள்ளார்.
புதிய வர்த்தமானி அறிவித்தல்
வாகன இறக்குமதிக்கான அனுமதிக்கமைய 2023, 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய முடியும். புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கமைய 2022 ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது.
இந்தநிலையில், வருடம் தொடர்பில் எழுந்த பிரச்சினை காரணமாகவே 197 வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் வேறு நோக்கங்களுக்காக சுற்றுநிருபத்திற்கு மாறாக எவரோ ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட விடயமாகவே இதனைக் கருதமுடிவதாக அந்த சங்கத்தின் உறுப்பினர் கீர்த்தி குணரத்ன தெரிவித்துள்ளார்.
வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கை
இதனிடையே, வாகனங்களை விடுவிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்படவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட (Seevali Arukgoda) ஊடகமொன்றிற்கு தெரிவித்தார்.
மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள சில வாகனங்களின் உற்பத்தி திகதி தொடர்பான அறிக்கைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.