வடக்கு – கிழக்கு
இன முரண்பாட்டுக்கு சமஷ்டி சிறந்த தீர்வு என்றும் தற்போதைய அரசுக்கு சிறந்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. சந்தர்ப்பத்தைச் சிறந்த
முறையில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்
சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு –
செலவுத் திட்டத்தின் முதல் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர்
மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தமிழர் நிலங்கள் அபகரிப்பு
மேலும் உரையாற்றுகையில், வரவு – செலவுத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான அரச செலவினம் 4218.2 பில்லியன்
ரூபா என்று ஜனாதிபதியினால் செலவு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால்,
வரவுக்கான வழி என்ன என்பது தொடர்பில் தெளிவாகக் கூறப்படவில்லை.
100 வீத செலவில் 69 வீதமானவை நடைமுறை செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 31
வீதமானவை மட்டுமே முதலீடுகளாக உள்ளன.
நாட்டின் பொருளாதாரம் மூலதன செலவுகள்
ஊடாகவே கட்டியெழுப்பப்பட வேண்டும். நாட்டின் மிக நெருக்கடியான நேரத்தில்
பொறுப்பேற்றுள்ள அரசு இது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
குறிப்பாக பாதுகாப்புச் செலவுக்கு மொத்த வரவு – செலவுத் திட்டத்தில் 11 வீதம்
ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தம், சண்டை இல்லாத நேரத்தில் 442 பில்லியன்
ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இன்னும் பெரும்பாலான மக்கள் குடியேற்றப்படவில்லை. மக்களின் காணிகள்
விடுவிக்கப்படவில்லை. தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில்,
மிதமிஞ்சிய இராணுவ ஆளனியுடன் இருக்கும் இலங்கையில் 11 வீதம் இராணுவத்துக்காக
ஒதுக்கப்பட்டுள்ளமை இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததல்ல. அதற்கான
எதிர்ப்பையும் பதிவு செய்கின்றோம்.
புரையோடிப் போயுள்ள தமிழர்களின் பிரச்சினை
இதேவேளை, இந்த நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி பெற வேண்டுமாயின் இனங்களுக்கு
இடையிலான ஒற்றுமை பலமாக்கப்பட வேண்டும்.
வளமான இலங்கையைக் கட்டியெழுப்ப
புலம்பெயர் இலங்கையர்களே வாருங்கள் என்று ஜனாதிபதி அழைத்துள்ளார். அவர்களின்
தொடர்பை ஜனாதிபதி விரும்புகின்றார்.
ஆனால், இந்த மண்ணில் நீண்ட காலமாகப்
புரையோடிப் போயுள்ள தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் அரசில் உள்ளவர்கள்
பேசுவதற்குத் தயங்குகின்றனர்.
சிங்கப்பூர், ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் இலங்கையைப் போன்று முன்னேற்றமடைய
வேண்டும் என்று ஒருகாலத்தில் குறிப்பிட்டது. ஆனால், இலங்கை 1940இல் எப்படி
இருந்ததோ அப்படியே இன்றும் நாடு இருக்கின்றது.
புலம்பெயர்ந்தோருக்கு அழைப்பு
இந்நிலையில் புலம்பெயர்ந்தோரே வாருங்கள் என்று அழைப்பு விடுக்கும்போது இந்த
நாட்டில் தமிழரின் அடிப்படை உரிமைகள் தமது தேசத்தில் தேசிய இனமாக
அடையாளப்படுத்தும் உரிமையை இந்த நாடு எவ்வாறு வழங்கப் போகின்றது என்ற
கேள்விகள் அவர்களிடத்தில் உள்ளன.
இந்த நாட்டில் சமஷ்டி தொடர்பில் பேசி 2026ஆம் ஆண்டில் நூறு ஆண்டுகளாகிவிடும்.
1926ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க எழுதிய கட்டுரைகள் சமஷ்டி தொடர்பில்
குறிப்பிட்டிருந்தன.
ஆனால், 1956ஆம் ஆண்டில் பண்டா செல்வா ஒப்பந்தத்துக்கு
முன்னர் குறிப்பிட்ட கட்டுரைகளின் மூலம் சமஷ்டி தொடர்பில்
குறிப்பிட்டிருந்தார். தந்தை செல்வாவும் இது தொடர்பில் உரைகளை நிகழ்த்தியிருந்தார்.
சிங்கள தேசிய
இனத்தின் அடையாளம் மற்றும் நிலம் எவ்வளவு முக்கியமோ அதேபோன்று இந்த மண்ணில்
தோன்றி வளர்ந்த தமிழ்த் தேசிய இனத்தை அங்கீகரிக்காத வரையில் இந்த நாட்டின்
தூய்மையான பயணங்களை எவ்வாறு கொண்டு செல்லப் போகின்றீர்கள் என்ற கேள்விகள்
உள்ளன.
தமிழரின் கோரிக்கைகள்
தமிழரின் கோரிக்கைகளை மழுங்கடிக்கச் செய்யாதீர்கள். நாட்டில்
நீங்களும் நாங்களும் சேர்ந்து வாழ வேண்டும். சமாதானத்தை அடையும் தூரம்
நீண்டதாகத் தெரிகின்றது. அதனை நெருக்கமாகக் கொண்டுவாருங்கள்.
உங்களின்
காலத்தில் அதனைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டு வாருங்கள்.
நாங்கள் பல தடவைகள் ஏமாற்றப்பட்டமையினாலேயே உங்கள் மீதான நம்பிக்கையை
இழந்திருக்கிறோம்.
போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று குறிப்பிட்ட முன்னான்
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, 1995ஆம் ஆண்டு மரணப்படுக்கையில் வடக்கு – கிழக்கு
இன முரண்பாட்டுக்கு சமஷ்டி முறைமையிலான தீர்வு சிறந்தது என்று
குறிப்பிட்டிருந்தார்.
2015 மார்ச் மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமர் நரேந்திர
மோடி, கூட்டு சமஷ்டி முறைமை இலங்கைக்குச் சிறந்ததாக அமையும் என்று
குறிப்பிட்டிருந்தார்.
ஆகவே, தற்போதைய அரசுக்குச் சிறந்த வாய்ப்பு
கிடைத்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை சிறந்த முறையில் பயன்படுத்துமாறு
கேட்டுக்கொள்கின்றேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.