புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்த பிரதான சந்தேகநபர் இன்னும் நாட்டிற்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு காவல்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருமான சட்டத்தரணி புத்திக மனதுங்க (Buddhika Manatunga) இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி என்ற பெண் நாட்டை விட்டு வெளியேறக்கூடியதாகக் கருதப்படும் அனைத்து இடங்களுக்கும் தற்போது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பிரதான சந்தேகநபர்
கடந்த 19ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தில், கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பிரதான சந்தேகநபருக்கு ஆயுதத்தை வழங்கியவர் கட்டுவெல்லேகம, நீர்கொழும்பு முகவரியில் வசிக்கும் 25 வயதான இஷாரா செவ்வந்தி என்ற இளம் பெண்ணாவார்.
குற்றம் நடந்த பின்னர் அவர் தலைமறைவான நிலையில், அவரை கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
எனினும், இன்று காலை அவரது தாயும் இளைய சகோதரரும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கொலைக்கு துணைபுரிந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.