ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது வழக்கமான அமர்வில் வெளியுறவு
அமைச்சர் விஜித ஹேரத், இன்று உரையாற்றினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் மனித உரிமைகள், பொருளாதார
ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை
அவர், இதன்போது கோடிட்டுக் காட்டினார்.
இலங்கையின் அண்மைய தேர்தல்களின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த தேர்தல்களின் விளைவாக நாட்டின் மிகவும் உள்ளடக்கிய நாடாளுமன்றம்
அமைந்தது. இது சமத்துவம் மற்றும் பிரதிநிதித்துவத்தில் அரசாங்கத்தின் கவனத்தை
பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடி
2022 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி ஓன்று ஏற்பட்டதை சுட்டிக்காட்டிய
அவர், பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதில், அரச நிர்வாகத்தின் வெற்றியையும் சமூக
நலனுக்கான அதன் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினார்.
2025 வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் பாதிக்கப்படக்கூடிய
சமூகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு மேம்பாடு, வாழ்வாதார ஆதரவு மற்றும் நல்லிணக்க முயற்சிகள் மூலம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நெறிமுறை நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் ஊழலை எதிர்த்துப்
போராடுவதற்கும் “தூய்மையான இலங்கை” முயற்சியை அமைச்சர் ஹேரத்
சுட்டிக்காட்டினார்.
வெளிப்படைத்தன்மை மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் அரசாங்கத்தின் கவனத்தையும்
அவர் வலியுறுத்தினார்.
நல்லிணக்க முயற்சி
நல்லிணக்க முயற்சிகளை வலுப்படுத்த “இலங்கை தினம்” என்ற யோசனையை, அரசாங்கம்
முன்மொழிந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தேசிய ஒற்றுமைக்கான இலங்கையின்
அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் போன்ற நிறுவனங்கள்
பலப்படுத்தப்படும், அதே நேரத்தில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையகம் குறித்த
விவாதங்கள் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச மனித உரிமைகள் கட்டமைப்புகளில் இலங்கையின் தீவிர பங்கை அவர் மீண்டும்
வலியுறுத்தினார்,
மேலும் பாரபட்சமற்ற உலகளாவிய மனித உரிமை நடைமுறைகளை ஆதரிக்கும் அதே வேளையில்
ஐக்கிய நாடுகள் சபையுடன், தமது அரசாங்கம் ஒத்துழைப்பதாகவும் உறுதியளித்தார்.
இதேவேளை, இலங்கை பொருளாதார மீட்சி, நல்லிணக்கம் மற்றும் நிலையான வளர்ச்சியுடன்
முன்னேறும்போது, அவற்றுக்கு சர்வதேச ஆதரவையும் கோரினார்.