நாடளாவிய ரீதியில் 2026ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள நிலையில் நண்பகல் 12.15 மணிக்கு நிறைவடையவுள்ளது.
2,723 பரீட்சை நிலையங்களில் நடைபெறுகின்ற இந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றுகின்றனர்.
சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
நுவரெலியா மாவட்டம்
முதலாவதாக இரண்டாம் வினாத்தாள் வழங்கப்படும் என்பதுடன், அது காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காலை 10.45 மணிக்கு நிறைவடையவுள்ளதுடன் சிறு இடைவேளையின் பின்னர், காலை 11.15 முதல் நண்பகல் 12.15 வரை ஒரு மணித்தியால காலம் முதல் வினாத்தாளுக்காக வழங்கப்படும்.
இந்த நிலையில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நுவரெலியா மாவட்டத்தில் மாணவர்கள் தமது பெற்றோருடன் பரீட்சை நிலையங்களுக்கு ஆர்வத்துடன் வருகை தந்தனர்.

மழையினால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களைக் தவிர்க்கும் பொருட்டு, பெற்றோர்கள் முச்சக்கரவண்டிகள் மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளைப் பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.
மேலும், மாணவர்களின் தடையற்ற போக்குவரத்திற்காக அரசாங்கத்தினால் விசேட ‘சிசு செரிய’ பேருந்து சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டம்
இதேவேளை ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி
வலயங்களிலும் நடைபெற்று வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயம், மட்டக்களப்பு மத்தி கல்வி
வலயம், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம், பட்டிருப்பு கல்வி வலயம், கல்குடா கல்வி
வலயம் ஆகியவற்றில் உள்ள பாடசாலைகளில் இன்றைய தினம் ஐந்தாம் தர புலமைப்பரிசில்
பரீட்சைகள் நடைபெற்றது.

இன்றைய தினம் மாணவர்கள் ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை முன்னெடுத்து பரீட்சை
நிலையங்களுக்கு சென்றதை காணமுடிந்ததுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் சுமுகமான முறையில் பரீட்சைகள்
நடைபெறுகின்றன.
செய்தி – கிருஸ்ணகுமார்
யாழ் மாவட்டம்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை யாழ் மாவட்டத்தில் சுமுகமான முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும்
ஆசிரியர்களின் வாழ்த்துகளுடன் பரீட்சைக்கு தயாராகி பரீட்சை நிலையங்களுக்கு
சென்றுள்ளனர்.

மாணவர்களின் எதிர்கால கல்வி வாய்ப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப்
பரீட்சை சுமுகமாகவும் அமைதியான முறையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
பரீட்சைக்கு தோற்றும் அனைத்து மாணவர்களும் சிறப்பாகச் செயற்பட்டு நல்ல
பெறுபேறுகளைப் பெற வேண்டும் என பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்விச்
சமூகத்தினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
செய்தி – த.பிரதீபன்
அம்பாறை மாவட்டம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அம்பாறை மாவட்டத்தில் கடும்
வெயிலுக்கு மத்தியில் இடம்பெற்று வருகின்றது.
பரீட்சை காலை 09.30 மணிக்கு
ஆரம்பமானதுடன் பரீட்சார்த்திகள் அனைவரும் உரிய ஒழுங்கமைப்புடன் பரீட்சை
மண்டபத்திற்கு சென்றதை காண முடிந்தது.

இன்று காலை ஆரம்பமான குறித்த பரீட்சைக்கு கல்முனை கல்வி வலயம் சம்மாந்துறை
கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சைக்கு
சமூகமளித்திருந்தனர்.
மேலும் பரீட்சை இடம்பெற்ற நிலையங்களில் காவல்துறையினரின் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது
பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
செய்தி – பாறுக் ஷிஹான்
Source: https://ibctamil.com/article/grade-5-scholarship-examination-begins-islandwide-1786250871

