கணேமுல்ல சஞ்சீவவை கொன்ற துப்பாக்கிதாரியை முகப்புத்தகத்தின் ஊடாக தொடர்பு கொண்டு கொலை செய்ய தூண்டியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு இன்று (24) வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதன்போது, குற்றவாளிகள் அந்த நபரை முன்னாள் இராணுவ வீரர் என்று அடையாளம் கண்ட பிறகு, “உனக்கு வேலையில்லையா, சிறிய வேலை ஒன்று செய்வோமா” என கேட்டு முகப்புத்தகத்தின் ஊடாக குறுஞ்செய்திகளை அனுப்பி கொலைக்கு தூண்டியுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆயுதப்படையினர்
அத்தோடு, கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானோர் ஆயுதப்படைகள் அல்லது காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பது மிகவும் தெளிவாகயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர்களைக் கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும், இராணுவ சேவையைச் சேர்ந்த ஒருவர் சட்டப்பூர்வமாக விடுவிக்கப்படாமல் தப்பிச் சென்றால், அது ஒரு குற்றம் என்றும் அவர்களைக் கைது செய்ய சட்டத்தில் ஏற்பாடுகள் உள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
கைது நடவடிக்கை
சமீபத்தில், கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில், துப்பாக்கிதாரி இராணுவத்தில் இருந்து வேலையில்லாமல் இருந்தபோது மட்டுமே சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அவரை சரியாக அடையாளம் கண்டுள்ளனர் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், இராணுவத்தை விட்டு வெளியேறிய வீரர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளை தாங்கள் கண்காணித்து, அனைத்து நபர்களையும் கைது செய்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.