யாழில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரியின் பெறுமதி மிக்க பொருட்களை உரியவர்களிடம் கையளித்த இளைஞனின் முன்மாதிரியான செயலை சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், கண்டியிலிருந்து (Kandy) யாழ்ப்பாணம் (Jaffna) நோக்கி பயணித்த கார் ஒன்று கடந்த 26ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பருடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காரில் பயணம் செய்துள்ள நிலையில் நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 52 வயதான சத்தியானந்த பிரபாகர குருக்கள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர்
மேலும் அவரின் மணைவியான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna)விரிவுரையாளர் மற்றும் அவரின் மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பல்கலைக்கழக விரிவுரையாளரின் தாலி, சிறு தொகைப் பணம் மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை மிரோசிகன் என்ற இளைஞன் கண்டெடுத்து இந்திய தூதரகத்தில் குறித்த பொருட்களை ஒப்படைத்துள்ளார்.
இளைஞனின் முன்மாதிரியான செயல்
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, விபத்துள்ளானவர்கள் யாழ். இந்திய தூதரகத்தில் கடமையாற்றியவர் என்பதை ஊடகங்கள் வாயிலாக அறிந்து தாம் கண்டெடுத்த பொருட்களை உரிய இடத்தில் ஒப்படைத்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் குறித்த இளைஞன் தெரிவிக்கையில், “விபத்துகள் நேரும் போது அருகில் உள்ளவர்கள் உடனடியாக உதவிக்கு வர வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் சொத்துக்களை பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். விபத்துக்கள் யாருக்காவது ஏற்படக்கூடியது என்பதால், மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும்”என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மனித நேயம் மிக்க செயலை புரிந்த இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



