தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை
ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ
அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி
நடத்துவதாக அறிவித்துள்ள கடையடைப்பு எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
நடைபெறாது என்றும், அடுத்த திங்கட்கிழமை 18ஆம் திகதியே நடைபெறும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்தில்
எடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின்
பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
திகதியில் மாற்றம்
மடு தேவாலய உற்சவத்தை ஒட்டி மன்னார் குரு முதல்வருடனும் ஏனைய குருமாருடனும்
சுமந்திரன் நேற்று(12) பிற்பகல் மன்னாரில் கலந்துரையாடினார்.
அதையடுத்து தமிழரசுக்
கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனும் நல்லூர் உற்சவ தினங்கள்
குறித்தும் கலந்துரையாடிய பின்னர் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும்
வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி கடையடைப்பை வடக்கு, கிழக்கில் முன்னெடுப்பதில்லை.
எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை அதை மேற்கொள்ள முடிவு
செய்யப்பட்டுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.