ஜ.நாவிற்கு கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழரசுக் கட்சி பொய்யுரைத்துள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள முன்னணியின் அலுவலகத்தில் நேற்று(9) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும்
தெரிவிக்கையில், ஜ.நா சம்பந்தப்பட்ட விடயத்தில் தமிழ்த் தேசிய கட்சிகள் சிவில் அமைப்புக்கள் என
பலரும் ஒன்றிணைந்து கடிதமொன்றை அனுப்பும் முயற்சியை நாங்கள்
முன்னெடுத்திருந்தோம்.
இனப்படுகொலை
அதாவது தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல்
நீதிமன்றில் பாரப்படுத்த வலியுறுத்தி கட்சிகள் சிவில் அமைப்புக்கள் என பலரது
இணக்கத்துடன் கடிதத்தையும் தயாரித்து ஜ.நாவிற்கு அனுப்பியுள்ளோம்.
இந்தக் கடிதத்தில் உள்ள விடயங்களில் தமிழரசுக் கட்சியும் இணக்கம் தெரிவித்து
தாமும் கையொப்பம் வைப்பதாக தெரிவித்திருந்தது.அதற்கமைய ஆரம்பகட்ட
பேச்சுக்களும் நடைபெற்றது. எனினும் இறுதியில் தமிழரசுக் கட்சி பொய்களை
கூறியுள்ளது.
இதனால் இரு தரப்பிற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளும்
முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக இந்த கடிதத்துடன் தான் இணங்குவதாகவும் கட்சித்
தலைவர் தான் குழம்புவதாகவும் எப்படியாயினும் யாழில் நடக்கும் கூட்டத்தில் பேசி
ஒரு முடிவிற்கு கொண்டு வருவோம் என அக் கட்சியின் செயலாளர் சுமந்திரன்
கூறினார்.
அவ்வாறாயின் இக் கடிதத்தை மேலும் பலப்படுத்துவதாக இருந்தால் பரவாயில்லை எனவும்
அதில் வெட்டி திருத்தம் என்றால் தாமதம் ஏற்படும் எனவும் சுட்டிக்
காட்டப்பட்டது.
மேலும் கடிதத்தின் தரத்தை குறைக்க முடியாது. தரத்தை கூட்டுவதாக
இருத்தல் தாமதித்தாலும் பரவாயில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆனால் யாழில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் முடிவடைந்த
பின்னர் நடாத்திய ஊடக சந்திப்பின் போது இதுவரையும் எங்களுக்குள் பேசப்பட்ட
விடயங்களுக்கு மாறாக அப்பட்டமான பொய்களை சுமந்திரன் சொல்லியுள்ளார்.
அதேநேரம் தமிழரசுக் கட்சி கூட்டம் முடிவடைந்த பின்னர் எங்களுக்கிடையே சந்திக்க
இணங்கிமிருந்தும் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டும் தாம் சந்திப்பிற்கு
வரவில்லை என எமக்கு அறிவிக்ககாமலே சந்திப்பை தவிர்த்திருந்தனர்.
இதன் பின்னரே நாம் அந்தக் கடிதத்தை அனுப்பினோம்.
பொய் குற்றச்சாட்டு
அதற்கு பிற்பாடு 7 ஆம் திகதி கொழும்பில் 5 மணிக்கு எனது இல்லத்தில் சந்திக்க
இணங்கியிருந்தோம். அதாவது காண்டிபனுக்கு சத்தியலிங்கம் சந்திக்கிறாதா என
மெசேஜ் ஒன்றும் அனுப்பப்பட்டது.
இதற்கமைய அவர்கள் தொடர்ந்தும் சந்திக்க விருப்பம் என்றால் அடுத்த வாரம் யாழில்
சந்திக்கலாம் என நாங்கள் சொல்லியுள்ளோம்.
இவ்வாறு நாங்கள் வெளிப்படைத் தன்மையாக நேர்மையுடன் இயங்க விரும்புகிறோம்.
ஆனால் அவர்கள் தான் திட்டமிட்ட பொய்களை சொல்லி உள்ளனர்.
அவர்களது இந்த பொய்களை தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பை நடாத்துகிறோம். ஏனெனில்
தமிழர் தரப்பில் உள்ள அனைவருமாக இந்தக் கடிதம் எழுதுவதில் நாங்கள் தான்
முன்னின்றோம்.
தொடர்ந்தும் அந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
குறிப்பாக இந்த 5 வருடம் தமிழ் தேசியம் முன்னோக்கி செல்ல போகிறதா பின்னோக்கி
செல்ல போகிறதா என்ற ஆபத்து ஏற்பட்டு உள்ளது. தமிழ்த் தேசியம் பாதுகாக்கப்பட்டு
முன்னோக்கி பயணிக்க வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சி உட்பட நாம் அனைவரும்
கட்டாயம் இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும்.
இவ்வாறு ஐந்து வருடத்தில் நாங்கள் ஒரு பொது நிலைப்பாட்டிற்கு வராவிட்டால்
தமிழ் இனம் அழியும். ஆகவே தமிழினத்தை பாதுகாக்க எங்களுக்கிடையே நிச்சயம்
இணக்கபாட்டை ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறான இணக்கப்பாட்டை ஏற்படுத்த நாங்கள்
தொடர்ந்தும் முயற்சிப்போம்.
எனவே திட்டமிட்ட பொய்களை குற்றச்சாட்டுக்களை விடுத்து இனத்திற்காக இணங்கி
செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்தார்.