யாழ்ப்பாணம் – (Jaffna) வலி வடக்கில் பல காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டு இருந்தாலும் 2013ஆம்
ஆண்டு வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட
வேண்டிய காணியாகவே காணப்படுகிறது என மனிதவுரிமை செயற்பாட்டாளர் ஜட்சன்
தெரிவித்துள்ளார்.
வலி. வடக்கில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களின்
பிரதிநிதிகள் யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (22) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ”தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் 2,800 ஏக்கர் காணியே விடுவிக்கப்பட
வேண்டியுள்ளதாக மாவட்ட செயலர் கூறுகின்றார். ஆனால் 2808 ஏக்கர் என பிரதேச
செயலக தகவல்கள் கூறுகின்றன.
6,317 ஏக்கர் காணிகள்
ஆனால் 2013ஆம் ஆண்டு வெளியான வர்த்தமானியில் 6,317 ஏக்கர் காணிகள்
இராணுவத்தினர் வசமுள்ளதாகவும், அவற்றை இராணுவ தேவைகளுக்காக சுவீகரிக்க
உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பின்னரான கால பகுதியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கட்டம் கட்டமாக பல
பகுதிகளில் உள்ள காணிகள், வீதிகள், ஆலயங்கள் என்பவற்றை மீள மக்களிடம்
கையளித்து வந்துள்ளன.
அந்த காணிகள் மக்களிடம் மீள கையளிக்கப்பட்ட இருந்தாலும் 2013ஆம் ஆண்டு
வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அது இராணுவ தேவைக்காக சுவீகரிக்கப்பட வேண்டிய
காணியாகவே காணப்படுகிறது.
விவசாய நடவடிக்கை
எனவே 2013ஆம் ஆண்டு வெளியான வர்த்த மானியை உடனடியாக இரத்து செய்ய இந்த
அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அந்த வர்த்தமானியை இரத்து
செய்தால் மாத்திரமே தற்போது மக்கள் மீள் குடியேறியுள்ள காணிகளில் அவர்கள்
நிம்மதியாக வாழ முடியும்.

அத்துடன், மக்களின் காணிகளில் இதுவரை காலமும் இராணுவத்தினர் விவசாய
நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பணம் ஈட்டியுள்ளனர்.
அவர்கள் தனியார்
காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காக காணி உரிமையாளர்களுக்கு
இழப்பீடு வழங்க வேண்டும் என்பதுடன், காணிக்கான குத்தகை பணத்தினையும் வழங்க
வேண்டும்” என தெரிவித்தார்.

