பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா உட்பட அக்கட்சியிலுள்ள அனைத்து தமிழ் உறுப்பினர்களும் உடன் பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) வலியுறுத்தியுள்ளார்.
அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழரசுக்
கட்சி கேவலமாகக் காண்கின்றது.
சட்டவிரோத புத்தர் சிலை
நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை காவல்துறையினரால் அகற்றப்பட்ட போது அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கின்றது என்று சிலர் நினைத்தார்கள்.

ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
பாதுகாப்புக்காகவே சிலை அகற்றப்பட்டதாகவும் அது இன்று மீள நிறுவப்படும்
என்றும் வெட்கமில்லாமல் அறிவித்த போதே சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது.
சிங்கள பௌத்த பேரினவாத அரசு
தே. ம. ச. அரசும் முன்னைய அரசுகளை போலவே ஒரு இனவாத சிங்கள பௌத்த பேரினவாத அரசு என்பதை நிறுவியுள்ளது.

இக் கட்சியைச் சேர்ந்த திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உட்பட அனைத்து
தமிழ் உறுப்பினர்களும் உடனடியாக இராஜிநாமா
செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

