எமிரேட்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை தனது தனிப்பட்ட கோபதாபத்திற்காக மீளப் பெற்றுக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்தவும் அவரின் சகோதரர்களும் இணைந்து 40 கோடிக்கும் மேல் நட்டம் ஏற்படுத்தினர் என பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் முதலீடுகளை மேம்படுத்துதல் மற்றும் பரஸ்பர பாதுகாப்பு குறித்து 2025 பெப்ரவரி 12ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
950 கோடி இலாபம்
தொடர்ந்துரையாற்றிய அவர், “ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸை எமிரேட்ஸ் நிறுவனம் நிர்வகித்த போது ஒவ்வொரு வருடமும் 950 கோடி இலாபம் ஈட்டியது.

எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸை 1998ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரத்துங்கவே வழங்கினார்.
2007இல் எமிரேட்ஸிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் மகிந்த மற்றும் பசில் ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய விதத்தில் 40 கோடிக்கும் மேல் நட்டமடையும் நிலைக்கு தள்ளினர்.
இவற்றை மஹிந்த தரப்பினர் மறந்தாலும் மக்கள் மறக்கவில்லை.
இதனாலே நாம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கிடையில் முதலீடுகளை மேம்படுத்தற்கான நம்பிக்கையை ஏற்படுத்த முயற்சி எடுத்துள்ளோம்” என்றார்.

