அற்ப அரசியலுக்காக இனவாதம் பேசி தேசிய மக்கள் சக்தியையும், தமிழ் பேசும்
மக்களையும் பிரிக்க முற்படும் அரசியல் வியாபாரிகளுக்கு காலம் சிறந்த பாடத்தை
கற்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர்
இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார்.
அத்துடன், எப்படியான அரசியல் சூழ்ச்சிகள் வகுக்கப்பட்டாலும் மக்களுக்கான
அரசியலை முன்னெடுக்கும் தேசிய மக்கள் சக்தியை கைவிட்டு செல்வதற்கு தமிழ்
பேசும் மக்கள் தயாரில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பிலே இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பின்னடைவு
ஏற்பட்டுவிட்டதாக அரசியல் களத்தில் எதிரணிகள் ஒப்பாரி வைக்கின்றன.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவை, பொதுத்தேர்தல் முடிவுடன் முடிச்சு போடுகின்றன. கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நிலைமை
புரியும்.
மக்கள் ஆதரவு
அதேபோல தேசிய மக்கள் சக்தி 266 சபைகளைக் கைப்பற்றியுள்ளது. வடக்கிலும் 150
இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். எனவே, பின்னடைவு, வீழ்ச்சி
எனக் கூறப்படுவதெல்லாம் அப்பட்டமான பொய்.
மக்கள் ஆதரவு எமக்கு என்றும் உள்ளது.
ஏனெனில் நாம் மக்கள் அரசியலை முன்னெடுப்பவர்கள்.
உண்மையான நல்லிணக்கம் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இந்த
அரசாங்கம் முழு வீச்சுடன் செயற்படுகின்றது. அதற்கு மக்களும் துணை
நிற்கின்றனர்.
எனினும், இனவாதம் பேசி, மக்களை பிரித்தாளும் அரசியலை சிலர்
முன்னெடுக்க முற்படுகின்றனர். அப்படியானவர்களுக்கு காலம் நிச்சயம் பதில்
சொல்லும்.” என தெரிவித்துள்ளார்.