மோடியின் இலங்கை வருகையின் போது இருநாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பங்தங்கள் தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது கோரிக்கையை முன்வைத்துள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழர் தாயகத்திலும் அதை அண்டிய கடலிலும் உள்ள வளங்கள் பயன்படுத்தப்படும் போது தமிழர் தேசத்தின் சம்மதம் அவசியம்.
இலங்கை- இந்திய ஒப்பந்தம்
வடக்கு, கிழக்குப் பகுதிகள் தமிழர் தாயகம் என்பது இலங்கை இந்திய ஒப்பந்தத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒருவிடயமாகும்.
இந்த நிலையில், தமிழர் தாயகத்திலும் அதை அண்டிய கடலிலும் இருக்கின்ற வளங்கள், அவை இயற்கை வளம், மனித வளம் என எந்த வளங்களாக இருந்தாலும் அந்த வளங்கள் பயன்படுத்தப்படும் போது, ஏனைய அரசுகளுடன், நாடுகளுடன் பங்கிடப்படும்போது தமிழ் மக்களுடைய, தமிழர் தேசத்தினுடைய சம்மதம் பெறப்படுதல் மிகவும் முக்கியமானதாக இருக்கவேண்டும் என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தமிழர் தேசத்துடன், தமிழ் மக்களுடன் கலந்து பேசாத, அவர்களுடைய சம்மதத்தைப் பெறாது மேற்கொள்ளப்படுகின்ற எந்த உடன்பாடுகளும், தமிழ்மக்களின் அங்கீகாரத்தினை பெறாதவை என்கின்ற அடிப்படையில் தமிழ் மக்களுடைய இறைமைக்கும், தமிழ் மக்களுடைய தாயகத்துக்கும் அவை உடன்பாடில்லாத விடயங்களாக இருக்கின்றன என்பதனையும் நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.