இலங்கையில் ஐந்து இலட்சத்திற்க்கும் மேற்பட்டோர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கையின் ஆறு மாதகால முன்னேற்றம் மற்றும் இரண்டாம் கட்ட நடவடிக்கை குறித்து ஊடகவியலாளர்களுக்கு அறிவிப்பதற்காக இடம்பெற்ற கூட்டத்தின் போதே காவல்துறை மா அதிபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தேசபந்து தென்னகோன் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு பிரதேசங்களுக்கு போதைப்பொருட்களை விநியோகிப்பதாகக் கூறப்படும் 5,979 பேரில் இதுவரை 5,449 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு நடவடிக்கை
சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் 1,975 மில்லியன் ரூபா ஆகும்.

யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பில் இதுவரை ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 5,448 பேர் மேலதிக விசாரணைகளுக்காக காவல் நிலைய தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் அதிகரித்துள்ள போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த யுக்திய தேடுதல் நடவடிக்கைகள் புதிய கோணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது” என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/more-than-5-lakh-people-are-addicted-drugs-in-sl-1720082036

