பேரிடரின் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், அரசு
நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு இல்லாததால் மோசமடைந்துள்ளதாக¸பொதுஜன
பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
பேராதனையில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முரண்பாடான நிலைமை
டிசம்பர் 16 ஆம் திகதியன்று பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சகம்
தயாராகி வரும் நிலையில், இடம்பெயர்ந்த பல குடும்பங்கள் இன்னும் பாடசாலைக்
கட்டிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதே நேரத்தில், தேசிய கட்டிட ஆராய்ச்சி திணைக்களம் பாதுகாப்பற்ற வீடுகளை
விட்டு வெளியேறுமாறு மக்களை அறிவுறுத்துகிறது.
எனினும் பாடசாலைகளை திறப்பதற்காக, இடம்பெயர்ந்த மக்கள் குறித்த பாடசாலைகளில்
இருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்றும் நாமல்
சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை
இந்த நிலைமை முரண்பாடானது மற்றும் மோசமான ஒருங்கிணைப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில்,நாடாளுமன்றத்தை விரைவாக மீண்டும் கூட்டுவது, அரசாங்கம்
பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொண்டு பதிலளிக்க உதவும்
என்று ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதேவேளை பேரிடர் தொடர்பான முன்னெச்சரிக்கைகள் மற்றும் தகவல்கள் எவ்வாறு
பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டன என்பதை விசாரிக்க ஒரு தெரிவுக்குழுவை
அமைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

