இலங்கைத் தமிழரசுக் கட்சியால் வடக்கு, கிழக்கில் விடுக்கப்பட்டுள்ள கடையடைப்புக்கு அம்பாறை நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தலைமையிலான கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவை அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடையடைப்பு, நாளைமறுதினம் 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கடையடைப்புக்கு நாவிதன்வெளி பிரதேச மக்களும் வர்த்தகர்களும் முழுமையான
ஆதரவை வழங்கும்படி இந்திரன் ரூபசாந்தன் கோரியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் அதீத இராணுவப் பிரசன்னத்துக்கு எதிராகவும், முல்லைத்தீவில் இறந்த இளைஞருக்கு நீதி வேண்டியும், செம்மணி போன்ற இனப்படுகொலைக்கு நீதியை வழங்குமாறு கோரியும் கடையடைப்பு நடத்தப்படவுள்ளது.
இனத்தின் நன்மை
இது கட்சி பேதங்களுக்கு அப்பால் இனத்தின் நன்மை கருதிய ஒரு நடவடிக்கை ஆகும்.

ஆகவே, அனைவரையும் ஒன்றாக ஆதரவளிக்குமாறு வேண்டுகின்றோம்” எனக் கூறியுள்ளார்.

