தனியே யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல, ஆளணிகள் முழுவதையும்
யாழில் வைத்திருக்க முடியாது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
ஏனைய 4 மாவட்டங்களுக்கும் யாழ்.
மாவட்டத்திலிருந்தே ஆளணிகளைப் பங்கீடு செய்ய வேண்டியுள்ளது, அந்தப் பங்கீட்டை
உரியவாறு முன்னெடுக்குமாறும் அவர் கூறியுள்ளார்.
வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான
கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று மாலை
(22.10.2025) நடைபெற்றது.
திட்டங்கள் தயாரிப்பு
இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 2026ஆம்
ஆண்டுக்கான திட்டங்கள் ஒரு மாத காலத்தினுள் தயார் செய்யப்பட வேண்டும்.
திட்டங்கள் தயாரிக்கப்படும் போது திணைக்களத் தலைவர்கள் அவற்றை நேரடியாகப்
பார்வையிட்டு, அதன் தேவைப்பாடுகளை உரியவாறு மதிப்பீடு செய்ய வேண்டும்.
திட்டங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் மாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.

வாழ்வாதார உதவிக்கான திட்டங்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தாலும் அவை
அதன் நோக்கத்தை முழுமையாக எட்டவில்லை. எனவே அவ்வாறான திட்டங்கள்
தயாரிக்கப்படும் போது கூடுதல் அவதானம் தேவை. குறிப்பாக மத்திய அரசாங்கத்தாலும்
இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் மாவட்டச் செயலர்களுடன் கலந்துரையாட
வேண்டும்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதிக்கு மேலதிகமாக தூய்மை
இலங்கை செயற்றிட்டம் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்கள் ஊடாக மேலதிக நிதிகளைப்
பெற்றுக் கொள்ளலாம். எனவே, அதற்குரிய திட்டங்களையும் திணைக்களத் தலைவர்கள்
தயாரிக்க வேண்டும்.
மாவட்டங்கள், பிரதேசங்களுக்கு என்று நிதிகளைப் பங்கீடு செய்யாமல் எந்தப்
பிரதேசங்களுக்கு தேவைகள் அதிகமோ அங்கு கூடியளவு நிதிகளை ஒதுக்கீடு
செய்யவேண்டும். அதற்கு ஏற்றவாறே திட்டங்களும் தயாரிக்கப்பட வேண்டும்.
நடவடிக்கை
கடல்கடந்த தீவுகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஆபத்துக்
கொடுப்பனவை, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையை
அடிப்படையாகக் கொண்டு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் ஆளுநர்.

2025ஆம் ஆண்டு திட்டங்களை முன்னெடுக்கும்போது எதிர்கொண்ட சவால்கள் தொடர்பில்
குறிப்பாக சில திட்டங்களுக்கான கேள்விகோரல்களை வெளியிட்டபோது ஒப்பந்தகாரர்கள்
யாரும் அதற்கு விண்ணப்பிக்காமை தொடர்பாகவும் திணைக்களத் தலைவர்களால்
சுட்டிக்காட்டப்பட்டது. அதனை அடுத்த ஆண்டு எவ்வாறு சரி செய்வது என்பது
தொடர்பிலும் ஆராயப்பட்டது.
வட மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம்
பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், திணைக்களத் தலைவர்கள் அதற்கு
முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கௌரவிப்பு வழங்கல்
அத்துடன் சிறப்பாகச்
செயற்படும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான கௌரவிப்புக்களை
வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு திணைக்களத்தில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம்
செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன்
தகுதியில்லாத திணைக்களத் தலைவர்கள் அல்லது பணியாளர்கள் யாராக இருந்தாலும்
அவர்களுக்கான இடமாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை
எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.



