பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் (Pope Francis) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் நிர்வாகம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
88 வயதான பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ், சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 14ம் திகதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
வைத்தியசாலையில் அனுமதி
இதனால் வத்திகான் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருவாரம் கடந்துள்ள நிலையில், தற்போதுவரை அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சுவாசக் கோளாறு
நீண்டகால ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறால் பாப்பரசரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாக நேற்று காலையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அவருக்கு இரத்தமாற்றம் செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாப்பரசர் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கத்தோலிக்கர்களை வத்திகான் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.