புத்தாண்டைக் கொண்டாட மறுத்ததற்காக ஜனாதிபதி அநு ரகுமார திசாநாயக்கவைப் (Anura Kumara Dissanayake) பாராட்டியதாக வெளியான செய்தியை கொழும்பு மறைமாவட்டத்தின் தகவல் தொடர்புக் குழுவின் உறுப்பினர் அருட்தந்தை சிரில் காமினி பெர்னாண்டோ (Cyril Gamini Fernando) மறுத்துள்ளார்.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கொண்டாடாததற்காக ஜனாதிபதி அநுரவை தான் பாராட்டியதாக கூறி சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய செய்தி தொடர்பில் அருட்தந்தை பெர்னாண்டோ மேற்கொண்டவாறு கூறியுள்ளார்.
அந்த செய்தியில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்து இயேசுவின் துன்பத்தையும் மரணத்தையும் கொண்டாடும் நேரத்தில் யாரும் எந்த விழாவிலும் ஈடுபடக்கூடாது என்று அருட்தந்தை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் கண்டனம்
இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அருட்தந்தை சிரில் காமினி, “சமூக ஊடகங்களில் பரப்பப்படும் கருத்தை நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மத வெறுப்பை உருவாக்க சமூக ஊடகங்களில் இந்தப் பதிவைப் பதிவேற்றிய ஆர்வமுள்ள தரப்பினரின் முயற்சியை நாங்கள் கண்டிக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், புத்தாண்டைக் கொண்டாடுபவர்களுடன் ஒத்துழைத்து சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கு பாடுபடுமாறு அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் அழைப்பு விடுத்த சில நாட்களுக்குப் பிறகு, இந்த போலி செய்தி சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

