வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித
சேனாரத்ன(Rajitha Senaratne) வீட்டு உணவுகளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை
விடுத்துள்ளார் என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ராஜித சேனாரத்னவைப் பரிசோதித்த சிறைச்சாலை வைத்தியர்கள், அவரை
வைத்தியசாலையில் அனுமதிக்கும் அளவுக்கு நோய் பாதிப்பு எதுவும் இல்லை எனத்
தெரிவித்துள்ளது என்றும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
ராஜித கோரிக்கை
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும்
விசாரணைகள் தொடர்பில் தன்னைக் கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை
உத்தரவைத் தற்காலிகமாக இரத்துச் செய்யுமாறு கோரி ராஜித சேனாரத்ன
நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், ராஜித சேனாரத்னவின்
மனுவை நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
இந்நிலையில், ராஜித சேனாரத்ன கொழும்பு மேல்நீதிமன்றில் நேற்றுக் காலை
ஆஜரானதைத் தொடர்ந்து அவரைக் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் அதுவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான்
உத்தரவிட்டிருந்தார்.
பின்னர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.

