உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஏ எம். ஜே டி அல்விஸ் அறிக்கையை நிராகரிப்பதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ (Cyril Gamini Fernando) தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைக் குழு அறிக்கையில் உள்ள உண்மைகளை வெளியிடுவதற்காக கொழும்பில்
(Colombo) நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) வெளியிட்ட கருத்துக்கு அருட்தந்தை சிறில் காமினி இவ்வாறு பதிலளித்தார்.
பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே சிறில் காமினி இவ்வாறு குறிப்பிட்டார்.
குற்றவியல் குற்றச்சாட்டு
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கொலை விசாரணையில் சாட்சியங்களை மறைத்தமை மற்றும் அழித்தமை தொடர்பான குற்றவியல் குற்றச்சாட்டைப் பெற்றுள்ள பிரசன்ன அல்விஸின் (Prasanna Alwis) சகோதரியான ஏ.எம்.ஜே. டி அல்விஸ் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் உறவினர்களுக்கிடையே மோதல் உடனடியாக உருவாகும் என்பது தெளிவான உண்மை.
எனவே, அவ்வாறானவர் தலைமையிலான குழு சமர்ப்பித்த அறிக்கையை பக்கச்சார்பற்ற சுதந்திரமான அறிக்கை என எங்களால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, இந்த அறிக்கையை முழுமையாக நிராகரிக்கின்றோம்” என தெரிவித்தார்.