தகவல் அறியும் உரிமை (RTI) ஆணையகத்திற்கு போதுமான மற்றும் சுயாதீனமான நிதி
ஆதாரங்களை வழங்குவதை உறுதி செய்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை
சட்டத்தரணிகள் சங்கம் (BASL), ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை
வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் அதன் சுயாட்சி மற்றும் அதன் ஆணையை திறம்பட நிறைவேற்றும் திறனைப்
பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என்றும், சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஜனாதிபதிக்கு கடிதம்
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில், தகவல் அறியும் உரிமை ஆணையகம்
தற்போது எதிர்கொள்ளும் சவால்கள், குறிப்பாக கடுமையான பணியாளர் வெற்றிடங்கள்
மற்றும் போதுமான நிதி இல்லாமை குறித்து, சட்டத்தரணிகள் சங்கம் ஆழ்ந்த கவலையை
வெளிப்படுத்தியது.

இந்தக் குறைபாடுகள் ஆணையகத்தின் சுதந்திரத்தையும் திறம்பட செயல்படும்
திறனையும் நேரடியாகக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன என்று அந்த சங்கம்
குறிப்பிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை என்பது வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் உரிய
செயல்முறையை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான பாதுகாப்பாகும் என்பதை சங்கம்
மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

