இலங்கையில் தற்போது பரவி வரும் கொலைக் கலாசாரத்துக்கு உடனடியாக முடிவு
கட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாளுக்கு நாள் நாடு பூராகவும் கொலைக் கலாசாரம் பரவி வருகின்றது. நேற்றும்
கூட, நாட்டின் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரினது தேர்தல் தொகுதியான ஹோமாகம மீகொட பகுதியில் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர் சுட்டுப் படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்புக்குப் பிரச்சினை
இன்றளவில் கூட அரசால் இந்தக் கொலைக் கலாசாரதைத் தடுக்க
முடியாது போயுள்ளது.
தேசிய பாதுகாப்பு குறித்து வகுப்பு தருவதற்கு ஒரு நாற்காலியை எடுத்து வருமாறு
தெரிவித்த பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில்
கூட இன்று கொலை இடம்பெறுகின்றது.

பாதாள உலகக் கும்பல்கள், திட்டமிட்ட அடிப்படையில் குற்றச் செயல்களில் ஈடுபடும்
கும்பல்கள் மற்றும் கொலைகாரர்கள் ஆகியோர் தோட்டாக்கள், குண்டுகள்,
துப்பாக்கிகள், வாள்கள் போன்றவற்றைக் காட்டியும் பயன்படுத்தியும் சமூகத்தின்
கட்டுப்பாட்டை தமது பிடியில் எடுத்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசிடம் இந்தப் பிரச்சினைக்குத்
தீர்வு உள்ளதா என்றுதான் கேள்வி எழுப்புகின்றோம்.
இவ்வாறான கொலைச் சம்பவங்கள் தேசிய பாதுகாப்புக்குப் பிரச்சினையாக அமைந்து
காணப்படவில்லை என்று அரசு தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றது.

நாட்டில்
மக்கள் இறந்து கொண்டிருந்தால், அது தேசிய பாதுகாப்பு சார் பிரச்சினைகளில்
ஒன்றாகும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்து, மக்களின் உயிரைப் பாதுகாப்பது
ஜனாதிபதி தலைமையிலான அரசின் பொறுப்பாகும். இவ்வாறு செய்வது நாட்டுக்கான கடமை” எனக் கூறியுள்ளார்.

